Semmozhi
Well-known member
- Messages
- 330
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நற்றிணையில் வரும் ஒரு பாடல், பெண் ஒருத்தியின் காதல் உணர்வை பதிவு செய்யும் பொழுது கூடவே ஆந்தை என்ற பறவை இனத்தை பற்றிய அனைத்து செய்திகளையும் பட்டியலிட்டு விடுகிறது, எலிகளிடம் இருந்து நம் உணவுப் பொருட்களை காப்பாற்றித் தரும் மிகப்பெரும் உதவியை செய்பவை ஆந்தைகள் தான் ஆனால், பொதுவாக ஆந்தைகள் குறித்த அறிவோ விழிப்புணர்வோ நம்மிடையே பரவலாக இல்லை.
நம் மூதாதையர்களான சங்கத்தமிழர்கள் அது குறித்த அறிவைக் கொண்டு இருந்துள்ளனர். "எலி வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய தன்மையுடையது, ஓர் இணை எலி ஒரு சமயத்தில் 6 முதல் 8 குட்டிகளை ஈனும், அந்த எலிகள் ஒரு வருட முடிவில் 880 எலிகளாக பெருகும், இதே வேகத்தில் சென்றால் 5 வருட முடிவில் பல லட்சம் எலிகளாக பெருகிவிடும்.
இந்த நிலை நீடித்தால் மனித இனம் உற்பத்தி செய்யும் உணவு அனைத்தும் எலிகளுக்கே போதாதது மட்டுமல்ல எலிகளால் உருவாகும் நோய்களும் பெருகிவிடும். ஆனால், இயற்கை அதை அனுமதிப்பதில்லை, எலிகள் எவ்வளவு வேகமாக பெருகுகின்றதோ, அதே அளவு வேகமாக அதை கட்டுப்படுத்துபவை ஆந்தைகள்.
ஆந்தைகளின் பிரதான உணவு எலிகள் என்பதால் எலிகள் பெருகிவிடாமல் இயற்கை சமநிலையை நிலைநிறுத்தும் வேலைகளை அப்பறவைகள் செய்கின்றன எனவே, நம் உண்ணும் உணவிற்கு பின்னால் ஆந்தையின் உழைப்பும் இருக்கிறது" என பறவையியலாளர் சலிம் அலி தனது The book of Indian birds என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
கடவுட் முதுமரத்து" எனத் தொடங்கும் நற்றிணைப் பாடலில் தலைவி, ஒரு முதிர்ந்த பெரிய மரத்தின் அருகில் சென்று, அந்த மரத்தில் அமர்ந்து இருக்கும் ஆந்தையை பார்த்து, ஏ ஆந்தையே, வளைந்த அலகும் , கூரிய நகங்களும் உடைய நீ இரவில்தான் விழித்துக் கொண்டிருப்பாய் என எனக்கு தெரியும்; மேலும், மெல்லிய பறை ஒலி எழுப்புவது போல சத்தம் போடுவாய்; ஆனால், இன்றைக்கு இரவு என் காதலன் என்னை சந்திக்க வருகிறான்; நாங்கள் இந்த மரத்தின் அடியில்தான் நின்று பேசுவோம், அப்படி நாங்கள் சந்திக்கும் பொழுது சத்தம் போட்டு எங்களை காட்டிக் கொடுத்து விடாதே.
அப்படி மட்டும் நீ சத்தம் போடாமல் இருந்தால் எலிக்கறியை சமைத்து , வெண் சோற்றில் இட்டு, நெய் ஊற்றி பிசைந்து உனக்கு உண்ண தருகிறேன், எனக் கூறுகிறாள்.
தன் காதலை பற்றி பேசும் இந்த இடத்தில், ஆந்தைகளுக்கு பிடித்த உணவு எலிக்கறி என்பதை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், ஆந்தையின் வாழ்விடம் எது, அதன் உருவ அமைப்பு எப்படி இருக்கும், அது எப்படி குரல் எழுப்பும், என பறவையியலில் ஒரு பறவை குறித்துக் கற்றுக் கொள்ள வேண்டியதாக பட்டியலிடப்படும் கூறுகளை எல்லாம், காதலை சொல்லும் இடத்தில் பதிவு செய்து விடுவதுதான் தமிழர்களின் சிறப்பு.