• Please use an working Email account to verify your memebership in the forum

பயிர்களும் பட்டங்களும்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

பயிர்களும் பட்டங்களும், பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது எப்படி?

பயிர்களும் பட்டங்களும் பட்டம் என்றால் என்ன?

பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் ..!

பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.

வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள்,
மற்றும் காய்கறிப் பயிர்களும்
பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டம் தேடி விதை இது பழமொழி.

சித்திரை முதல் ஆனி வரை வெயிலின் ஆர்ப்பாட்டம். ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும். அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஒரு விதை என்பது ஒருதுளி விருட்சம்! ஒரு பெரிய மரமானாலும் சரி, ஒரு சிறிய செடியனாலும் சரி, அது ஒரு விதைக்குள்தான் அடங்கி இருக்கிறது. விதைகள், தாங்கள் நல்லமுறையில் முளைத்து வருவதற்கு தகுந்த பருவகாலம் வரை மண்ணுக்குள் பல வருடங்கள் கூட காத்துக்கிடக்கின்றன.

இந்த ஆடிமாதமானது விதைகளை விதைப்பதற்கு தகுந்த பருவநிலையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு என சொல்லப்படும் ஆடிப்பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆடிப்பட்டத்தை உறுதிசெய்யும் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு நம்பிக்கை.

ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ‘ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்’ என்பதை முன்னோர் கணித்து ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடிப்பட்டம் எப்போ வரும்? என காத்திருப்பர்.

ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக கதிரவனை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும்.

ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு.

மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கீட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.

மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.

நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.

மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிக்கின்றன.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.

பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் :-

வெங்காயம் – வைகாசி, புரட்டாசி, மார்கழி,

பீர்க்கங்காய் – புடலை,பாவை – சித்திரை, ஆடி, ஆவணி,

அவரை – சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி,

கத்தரி – ஆடி, மாசி,

வெண்டை – மாசி, பங்குனி,

மிளகாய்,கொத்தவரை – வைகாசி, ஆனி,
ஆவணி புரட்டாசி,கார்த்திகை. தை, மாசி,

முருங்கை – புரட்டாசி, ஐப்பசி,

எள் – ஆடி, சித்திரை,

சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி,

சுண்டல் – ஐப்பசி, கார்த்திகை,

நெல், – புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

ஊளுந்து – ஆடி, மாசி,

கம்பு – மாசி, பங்குனி,

நாட்டுச்சோளம்- சித்திரை, மாசி, கார்த்திகை,

தென்னை- ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி,

கரும்பு- கார்த்திகை, தை,

வாழை – கார்த்திகை, மார்கழி,

மரவள்ளி – கார்த்திகை,

பருத்தி – ஆவணி, புரட்டாசி, மாசி,

தட்டப்பயறு ,பாசிப்பயறு,
துவரை, மொச்சை – ஆடி,

ஆண்டுமுழுவதும் பயிரிடலாம் – ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு,

மக்காச்சோளம்,பட்டுவளர்ப்பு, கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை)

சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை)

குறிப்பு :-
மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம்.

ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. ஒரு விதை சரியான நேரத்தில் சீதோஷ்ண நிலையில் விதைக்கப்படும் போதுதான் அது முழு வளர்ச்சியடைந்து பலன் தரும். ஆடி 18ஆம் நாளும் அதற்குப் பின்னர் வரும் நாட்களும் விதைகள் விதைப்பதற்கு தகுந்த காலமாக உள்ளன. எனவே இதனை “ஆடிப்பட்டம்” என்றனர்.

பறவைகள் தன் எச்சத்தின் மூலம் ஒரு புறம் விதைக்க, விலங்குகள் இடம்பெயர்தல் மூலம் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளை நிலங்களில் தூவுகின்றன. காற்றும் நீரும் விதைகளைக் கொண்டு சென்று, உலகின் பல்வேறு இடங்களில் சேர்க்கின்றன். வண்டுகளும் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுகின்றன. இப்படி, இயற்கையில் அனைத்து ஜீவராசிகளும் மரங்களையும் தாவரங்களையும் பெருகச் செய்வதில் தங்களுக்கான பங்கை ஆற்றி வருகின்றன. மனிதர்களாகிய நாம் நம் பங்கிற்கு என்ன செய்கிறோம்?! காய்களையும் பழங்களையும் சாப்பிடுகிறோம்; மரங்களை வெட்டுகிறோம்; பெருகி வரும் மக்கள் தொகையால், பல அரிய தாவர மற்றும் விலங்கினங்களை அழிக்கிறோம்.

எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். அதில் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் தாக்குப்பிடிக்கும். வேப்ப விதைகளை மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்பட வேண்டும். நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும் கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் தாக்குப் பிடிக்கும்.

அகவே இந்த ஆடி 18-க்கு தயாராக இருங்கள். உங்கள் கையினால் ஒரு விதைக்கு வாழ்வு கொடுங்கள்.

மிகவும் சுவையான கனிகளின் பருத்த திரண்ட விதைகளையே தேர்வு செய்து நட்டு வையுங்கள். உங்கள் குழந்தைகளையும் இதில் அவசியம் பங்கு கொள்ளச் செய்யுங்கள். இதுவரை வீணே வீழ்ந்திருந்த நாம் இனி இந்த ஆடிப்பட்டத்தில் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களாவோம்!
 
Top